சென்னையின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை, பிப்ரவரி-14
2020ஆம் ஆண்டிற்கான சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வரைவு பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது சென்னை மாவட்டத்தில் மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் இருந்தனர்.
இதன்பிறகு 01.01.2020-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ்: சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணிக்கையை விட 1.49 சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய வாக்கார்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த உயர்வு எனவும் 59 ஆயிரத்து 905 புதிய வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 347 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்கள் உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.