ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி, பிப்ரவரி-14
3 ஆண்டுகளாக நீடித்து வந்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என நம்புவதாக தெரிவித்த உச்சநீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்தன.
இந்நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி மற்றும் டிடிவி அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு 14 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டப்பேரவைச் செயலர் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்று சபாநாயகர் தரப்பு விளக்கத்தை ஏற்பதாகவும், அவரது நடவடிக்கையில் தலையிட முடியாது எனவும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது. சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என நம்புவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்தது.