தோனி ஓய்வு பெறுகிறாரா? – மனைவி சாக்ஷி விளக்கம்
தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வீண் வதந்தி என்று அவரது மனைவி சாக்ஷி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மும்பை, செப்-12

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது முன்னாள் கேப்டன் தோனி கடும் விமர்சனத்திற்குள்ளானார். அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ்.தோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை. இந்நிலையில் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். தோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டார்.
விராட் கோலியின் டுவீட்டை வைத்து, டோனி ஓய்வு பெறலாம் என்ற செய்தி தீயாக பரவியது. இதற்கிடையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது, தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், அப்படி எந்த தகவலும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார். ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தோனியின் மனைவி சாக்ஷி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வீண் வதந்தி என பதிவிட்டுள்ளார்.