அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அரவகுறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, ஏப்ரல்-2

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தாக்கிப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில கடந்த இரு நாட்களாக வைரலானாது.
அரவக்குறிச்சி தொகுதி, ஆண்டிபட்டிகோட்டை அருகேயுள்ள பூமதேவம் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 31) வாக்குச் சேகரித்தபோது அண்ணாமலை பேசிய அந்த வீடியோவில், “திமுகவின் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதித்தால் பல் எல்லாம் வெளியே வந்துவிடும். நான் இங்குள்ள திமுகவினருக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வன்மத்தைக் கையில் எடுக்கத் தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடக முகம். அதைக் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்” எனப் பேசினார்.
அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தநிலையில் போடிநாயக்கனுரில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி “ திமுகவினரை தொட்டு பார் தம்பி. தமிழகத்தில் பாஜகவின் வேலை எடுபடாது. திமுகவினரை மிரட்ட முடியாது, நாங்க எழுந்தா தாங்கமாட்டீங்க” என்றார்.
இந்த வீடியோ தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி நேற்று அளித்த புகாரின்பேரில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் (153), கொலை மிரட்டல் (506/1), தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது இன்று (ஏப்.02) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.