தேவேந்திர குல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தேவேந்திரகுல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.
டெல்லி, மார்ச்-19

தமிழகத்தில் மாநில பட்டியல் இனத்தில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வழி செய்யும் அரசியலமைப்பு சட்டதிருத்த மசோதாவை கடந்த மாதம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்படும் இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், மற்றபடி பட்டியலின சலுகைகள் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.