மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 3 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, மார்ச்-18

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
வளிமண்டலத்தில் ஒருகிலோமீட்டர் உயரம்வரை ஏற்படக்கூடிய காற்றின் சுழற்சி காரணமாக மார்ச் 20ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.