அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்.. விஜயகாந்த் அறிவிப்பு
அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை, மார்ச்-9

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
