உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி.. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அபாரம்..!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டை இந்திய அணி எளிதாக வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
அகமதாபாத், மார்ச்-6

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தது.
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ரிஷப் பண்ட் (101) வாஷிங்டன் சுந்தர் (96 அவுட் இல்லை) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளம் அமைத்தனர். இதனால் இந்திய அணி 365 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 2ம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜோ ரூட் 30 ரன்களில் வெளியேறினார். கடைசி வரை போராடிய டான் லாரன்ஸ் 50 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 135 ரன்களில் சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. இரண்டாம் இன்னிங்சில் அக்சர் பட்டேல், அஷ்வின் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.