அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வழங்கியுள்ளனர்.
சென்னை, மார்ச்-4

கடந்த 2014ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாகவும் ஆனால் அதன் உண்மையான மதிப்பு 6 கோடி என்றும் அதே போல் குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு சந்தை நிலவரப்படி ஒரு கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறவில்லை. இதனை அடுத்து மகேந்திரன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிந்து ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.ஆனால் நீதிபதி ஹேமலதா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிய முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்தார். நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.