திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி
திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச்-2

திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தாமதம் இல்லை.
எங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைக் கேட்டுள்ளோம். அவர்களும் அதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். எங்களுக்கிடையே எந்த சிக்கலும் இல்லை.அவர்களும் அவர்களின் நிலையை சொல்லியிருக்கிறார்கள். விரைவில் முடிவை அறிவிப்போம்.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.