இது துரோகம் இல்லையா?..புதுச்சேரி சட்டசபையில் பாஜகவை விளாசிய நாராயணசாமி..
புதுச்சேரி, பிப்-22

புதுச்சேரி சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-
நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சி தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளது. புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வந்த இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துவது துரோகம் இல்லையா? மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால், அது எதிர்க்கட்சிகளையும் பாதிக்கும். புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எவ்வளவு இன்னல் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்கு நல்லதை செய்து வந்தோம். கிரண்பேடி அளித்த நெருக்கடியையும் தாண்டி புதுச்சேரியை ஆட்சியை நடத்தினோம்.
காங்கிரஸ் அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மாநிலத்தின் வருவாயைக் குறைக்க சதித் திட்டம் தீட்டினார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். இதன் மூலம் புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகவிட்டது. மத்திய அரசு இந்தியை திணிக்கப் பார்த்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.
கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்றார்களே? எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்டார்கள். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்தி விட்டார்களா? வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று கூறியதே மத்திய அரசு, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது, வேலை வாய்ப்பை கொடுத்துவிட்டார்களா?
இவ்வாறு அவர் பேசினார்.
நாராயணசாமியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.