தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
சென்னை, பிப்-16

கொரோனா பரவலுக்கு பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய தொழிற் கொள்கை வகுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். புதிய தொழிற்கொள்கை தற்போது தயாராகி விட்ட நிலையில் அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
கடந்த 2 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழிற்கொள்கை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செய்யும் கொள்கை உள்ளிட்டவை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை சென்னையில் இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை அடிப்படையில் கொள்கை இன்று வெளியிடப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.மேலும் 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீட்டில் 68 ஆயிரத்து 778 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன.