உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு.. ரசிகர்களை கடிந்து கொண்ட நடிகர் அஜீத்..!!
அரசியல் பிரமுகர்களிடம் வலிமை படம் குறித்து கருத்து கேட்பது வருத்தமளிக்கிறது நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப்-15

வலிமை அப்டேட் குறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
கடந்த சில நாள்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூகநலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு, ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.