அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் கடும் நடவடிக்கை.. தமிழக காவல்துறை எச்சரிக்கை
அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓசூர், பிப்-8

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.
இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார். இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து இன்று காலை அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக எல்லையை நெருங்கி வருகிறார்.
இந்த நிலையில் தமிழக எல்லையான ஓசூரில் ஜூ ஜு வாடியில் அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு நோட்டிஸ் தரப்படும். காரில் இருந்து அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும். காவல்துறை அவகாசம் வழங்கிய பிறகும், காரிலிருந்து கொடியை அகற்றாவிட்டால் அடுத்த வரவேற்பு இடத்தில் அகற்றப்படும். அதாவது ஓசூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயில் அல்லது பேருந்து நிலையம் அருகில் சசிகலா காரில் பயன்படுத்தப்படும் அதிமுக கட்சிக் கொடி அகற்றப்படும். அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.