உத்தரகாண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு..பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி, பிப்-7

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்பு படை குழு அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் துரித படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருவான நிலைமையை சமாளிக்க அனைத்து ஆதரவையும் தருவதாக, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.
இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வெள்ள பாதிப்பினால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதேபோல் உத்தரகண்ட் மாநில அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.