முஸ்லிம்களின் 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றினார் எஸ்.பி.வேலுமணி
கோவை, பிப்-7

கோவையில் இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுனாபுரம் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.20 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இஸ்லாமிய மக்களின் மயானத்தை (கபர்ஸ்தான்) கோவை மாவட்ட இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒப்படைத்தார். இந்த விழாவில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த பிரச்சினை இருந்து வந்தது. இந்த சூழலில் இஸ்லாமிய சகோதரர்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.
2014 ஆம் ஆண்டு முதல்வர் புரட்சித் தலைவி அவர்களிடம் நேரில் அழைத்து சென்று கோரிக்கை மனுவை அளிக்க ஏற்பாடு செய்தேன். தற்பொழுது அது நிறைவேறியுள்ளது.
என் வீட்டை சுற்றி ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளது. எங்களிடம் வேறுபாடுகள் எப்போதும் இல்லை. எல்லோரும் எங்களுக்கு சகோதரர்களே.
மயானத்தின் அனுமதிக்காக அரசிடம் அலுவலக உதவியாளரை போல் பலமுறை கோப்புகளை எடுத்து சென்று அனுமதி பெற்றுள்ளேன்.
மேலும் அந்த இடத்தை சீரமைக்க ஜமாத்தாரை நானே நேரில் அழைத்து கருத்துக்களை கேட்டு. அவர்களின் விருப்பப்படி மயானம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத விதத்தில் எல்லா வசதிகளுடனும் அமைத்து கொடுத்துள்ளோம்.
கூடுதலாக முன்புற நிழல்குடை, தொழுகை நடைபெரும் இடம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடனும் அமைத்துள்ளோம்.
இது போன்ற கோரிக்கையை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.
அதுபோல் இதற்கு முன் தமிழக முதல்வரிடம், நானும் தமீமுன் அன்சாரி எம்,எல், ஏ வும் சென்று, ஹஜ் பயணத்திற்க்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை ரத்து செய்த விவகாரத்தை பேசினோம். இதனைக் கேட்ட நமது முதல்வர், இதனால் என்ன நாம் நிதி ஒதுக்கி கொடுக்கலாம் என்று உடனடியாக ஆணைபிறப்பித்தார். மேலும், ஹஜ் செல்லும் பயனிகளுக்கு ஹஜ் தங்கும் இடம் வழங்கியது நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.
நாகூர் தர்காவிற்க்கு குளம் சீரமைக்க கோரிக்கை வைத்தவுடன் 5.37 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டு இரண்டு நாளில் அந்த நிதி ஒதுக்கி சீர் செய்ய உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை பொருத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு, கொள்கை என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா வகுத்துக்கொடுத்தது. அதில் முதல்வர் தெளிவாக உள்ளார். மூன்று மேல் சபை எம் பி க்கான வாய்ப்பு வந்தவுடன் நமது சமூதாயத்தை சேர்ந்த ஒருவர் அந்த பதவியில் இருக்கவேண்டும் என்று முதல்வரிடம் கூறி , முகமது ஜான் அவர்களுக்கு வாய்பளித்து எம்.பி ஆக்கியது நமது முதல்வர் தான்.
கோவில்களுக்கு நிதி ஒதுக்குவதுபோல் முதல் முறையாக இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்க்கு நிதி ஒதுக்கியது நமது அரசுதான்.
அதுமட்டுமில்லாமல் அதற்கு அவர்கள் கட்ட வேண்டிய பணத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு உதவி செய்துள்ளது. 10 வருடத்தில் நான் செய்த உதவிகள்போல் இஸ்லாமிய மக்களுக்கு வேறுயாறும் உதவி செய்திருக்க முடியாது.
புரட்சித் தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி நடைபெறும் திருமண விழாவிலும், இஸ்லாமிய மணமக்களுக்கு அவர்கள் முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்கின்றோம்.
அதுபோல் அன்று சொன்னதை இன்று மீண்டும் சொல்கிறேன் இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுக்க முதல் ஆளாக நிற்பேன் என்று மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கின்றேன்.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் பழக்கம் எனக்கு கிடையாது. தேர்தலுகாக இல்லை எப்பொழுதும் உங்களின் சகோதரனாக நான் இருப்பேன்.
மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அது போன்ற சூழல் வராமல் தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்கும் சி.ஏ.ஏ போராட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மீதனா வழக்கை ரத்து செய்வது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன்
தேர்தல் வரும்போது வேல்பிடிக்கும் ஆள் நானில்லை. நான் மாலையிட்டு சபரிமலைக்கு போகிறேன். எல்லா கோவிலுக்கும் போகிறேன்.சில கல்லூரிகளிலும், பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கு இடம் அளிக்க மறுப்பு தெரிவித்தார்கள். அதை அந்த நிர்வாகத்துடன் பேசி சரி செய்துள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசினார்.