விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்.. டெல்லி காவல்துறை வழக்கு பதிந்த நிலையில் தன்பெர்க் பதிலடி
விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என கிரேட்டா தன்பெர்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாக்ஹோம், பிப்-4

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 70 நாட்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவை அந்த பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக அறிந்து கருத்துத் தெரிவிக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தை தூண்டும் வகையில் தவறான தகவல்களை பகிர்ந்ததால், கிரிமினல் சதி, சமூகங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்; விவசாயிகள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். அச்சுறுத்தலை கண்டு பின்வாங்க மாட்டேன். அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எந்த வெறுப்பு, அச்சுறுத்தல், மனித உரிமை மீறல் ஆகியவை அதனை மாற்றாது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரெட்டா தன்பெர்க் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.