பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல.. ராகுல் காந்தி ட்வீட்..!
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி, பிப்-2

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் 70 நாள்களைக் கடந்து முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற மாபெரும் டிராக்டர் பேரணியை கலவரத்தில் முடிந்தது.
இதையடுத்து, விவசாயிகள் மீண்டும் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வரும் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘‘பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல’’ என்று பதிவிட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.