பட்ஜெட் தாக்கலின் போது 2 திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
டெல்லி, பிப்-1

நாடாளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
என்ற திருவள்ளுவரின் திருக்குறளைக் கூறினார்.
‘பொருள் வரும் வழிகளை மென்மேலும் உண்டாக்கலும், வந்தவற்றைத் தொகுத்தலும், காப்பாற்றுதலும், காப்பாற்றியதைத் தக்கபடி வகுத்துச் செலவிடுதலும் ஆகியவற்றில் வல்லவனே அரசன்’ எனபதே இந்தக் குறளின் பொருள்.
திருவள்ளுவரின் இந்த குறளுக்கு இணங்கவே, மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதேபோல, ‘நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு’ என்று பொருள் படக்கூடிய
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
என்ற குறளையும் மேற்கோள்காட்டி பேசினார்.