சீருடை அணிந்து, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம்.. அமைச்சர் பேட்டி
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பழைய பேருந்துப் பயணச் சலுகை அட்டையை பயன்படுத்தி பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜன-18

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முதல் கட்டமாக பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்துப் பயணம் குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார பஸ் போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பஸ்களுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பஸ் போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பஸ்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.