அதிமுகவிடம் பாஜகவுக்கு 40-க்கும் மேற்பட்ட தொகுதியை கேட்டோமா?.. எல்.முருகன் அதிரடி பதில்
மதுரை, ஜன-8

பா.ஜ.க. சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சி செயல்பட்டு வருகிறது. ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம். வருகிற சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அப்போது அது குறித்து பேசுவோம்.
அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போல, விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும். அமித்ஷா சென்னை வருவது குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்க பெறவில்லை. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம்.
அனைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் பா.ஜ.க.வில் ஆர்வத்துடன் சேருகிறார்கள். நாட்டை சரியான பாதையில் பா.ஜ.க. கொண்டு செல்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில், 40-க்கும் மேற்பட்ட தொகுதியை கேட்டு இருப்பது குறித்து ஊகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
பா.ஜ.க. வேல்யாத்திரை நடத்தி, அதன் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.