40வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்… மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 40வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
டெல்லி, ஜன-4

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 40வது நாளை எட்டி உள்ளது. குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கடந்த 30ம் தேதி 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தது. அதில் விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இன்னும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகளில் முடிவு எட்டப்படவில்லை.
இந்த கோரிக்கைகள் குறித்து குறித்து 40 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய அரசு இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வலியுறுத்தியது போன்று 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 6 மற்றும் 26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் கூறினர்