மனநிலை பாதிப்பா?-நிர்மலாதேவிக்கு என்ன ஆனது?
அருப்புக்கோட்டை, அக்டோபர்-26
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிக்கியுள்ள நிர்மலாதேவி வீட்டில் உள்ள பொருட்களை ரோட்டில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த நிர்மலாதேவி கருப்பசாமி, முருகன் ஆகியோர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் நிர்மலாதேவி சுயநினைவின்றி தானாக பேசிக்கொள்வது போன்ற வினோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் நிர்மலாதேவி தனியாக வசித்து வருகிறார். இன்று காலை திடீரென மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்த நிர்மலாதேவி, வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் சேர் போன்ற பொருட்களை எடுத்து சாலையில் வீசினார்.

மேலும் கற்களையும் எடுத்து வீசியதில் வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தங்கப்பிரகாஷ் என்பவரின் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

நிர்மலாதேவியின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நிர்மலாதேவி மனநல பாதிப்பால் இந்த செயலை செய்தாரா? அல்லது வேண்டுமென்றே பொருட்களை ரோட்டில் வீசி பரபரப்பை ஏற்படுத்த முயன்றாரா? என விசாரணை நடந்து வருகிறது.
