டிச.29-ம் தேதி மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!
டெல்லி, டிச-26

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 31 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
31 நாட்களாக விவசாயிகள் ரயில்களை மறித்து போராடிவருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டும் வருகிறது. இதனால் ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இதுவரை மத்திய அரசு 5 முறை விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 29-ம் தேதி வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது. டிசம்பம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஸ்வராஜ் இந்தியா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவ், ”மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். டிசம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை மீது சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும்” என்று கூறினார்.