ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !.. அரசின் ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மனு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்துள்ளார்.அப்போது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது 97 பக்க ஊழல் புகார் அடங்கிய பட்டியலை அவர் ஆளுநரிடம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, டிச-22

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், முக்கிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வருகின்றன.
திமுக மீது 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி அதிமுக ஊழல்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதேபோல் அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளில் ஊழல் நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது 97 பக்க ஊழல் புகார் அடங்கிய பட்டியலை அவர் ஆளுநரிடம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் உடனடான சந்திப்பின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.