மின்வாரியத்திற்கு தனியார் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து..! ஊழியர்களின் போராட்டத்தால் ஒரே நாளில் பணிந்தது தமிழக அரசு!!
தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தனியார் மூலம் பணிநியமனம் செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை, டிச-21

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்களாக நிரப்புவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, தொழிற்சங்கங்கள் திரும்பப் பெற்றால், ஐந்து நாள்களுக்குள் 10 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். போராடும் மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன? போராட்டம் நடத்திக் கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அமைச்சர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயமாகாது என்றும், தமிழக மின்வாரியத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.