முதல்வர் வேட்பாளரை நாங்கதான் முடிவு செய்வோம்.. அடம்பிடிக்கும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
அரியலூர், டிச-19

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் பாஜக சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வணிகர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம், இரட்டிப்பு மகசூல் உள்ளிட்டவைகள், இந்த புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும்.
இதனால் பாரதிய ஜனதாவுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே திராவிட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும். எனது தலைமையிலான வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஏற்கனவே தொடங்கி விட்டது என்று கூறினார்.