ரஜினியுடன் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்றிணைய தயார்.. அதிரடி கிளப்பிய கமல்
மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து ரஜினியுடன் ஒன்றிணைய தயார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவில்பட்டி, டிச-15

இதுபற்றி கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-
“அரசியலில் புதிதாக வருபவர்கள் ஒரு காரணத்துக்காக வருகிறார்கள். எனது காரணத்தை நான் கூறிவிட்டேன். ஒரு மாற்றத்துக்காக வந்திருக்கிறேன். ரஜினியும் அதையே கூறுகிறார். ஆனால், கொள்கை குறித்து அவர் இன்னும் தெளிவாகக் கூறவில்லை. கொள்கையை விளக்கட்டும், பிறகு நாங்கள் பேசுவோம். ஒரு தொலைபேசி அழைப்பில் எளிதில் கிடைக்கக்கூடிய அளவிலான நண்பர்கள்தான் நாங்கள் இருவரும். முடியும் பட்சத்தில், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வோம். கொள்கை ஒத்துப்போனால், மக்களுக்கு நன்மை பயக்குமெனில் எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நாங்கள் இணைந்து செயல்படுவோம்.”
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.