சூரப்பா விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் உளறல் பேச்சு.. அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி, டிச-7

தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளும் நேரம் வந்துள்ளதால் அவர் இவ்வாறு பேசுகிறார். சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததுமே தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. என்னிடம் எந்த ஊழலும் இல்லை. எனவே, எந்த விசாரணையையும் எதிர்கொள்வேன் என்று கூறிய சூரப்பா தற்போதுநீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளார். மடியில் கனம் இல்லாதவருக்கு வழியில் பயம் ஏன்?
பேராசிரியர் நியமனம் தொடர்பாக ஏற்கெனவே முன்னாள் துணைவேந்தர் கொடுத்த பேட்டிக்காக, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏதேனும் பேச வேண்டுமென கமல்ஹாசன் பேசுகிறார்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.