சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டையாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு
சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ளார்.
சென்னை, டிச-5

இது தொடர்பாக, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:-
“பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதல்வர், கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று (டிச. 5) முதல் 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.