சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
சென்னை, டிச-3

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ம் தேதியன்று விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து அமையும்.
மார்ச் மாதம் கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைந்தது. பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் விலை ஏறியது. பின்னர் விலையில் எந்த மாற்றம் இல்லை.
இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.610க்கு விற்பனையாகும் சிலிண்டர் இனி, ரூ.660 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 19கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.56.50 உயர்ந்துள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1410.10க்கு விற்பனையாகிறது.
3 மாதங்களாக சிலிண்டர் விலை ரூ.610 ஆக இருந்த நிலையில் ரூ.50 அதிகரித்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.