அரியானாவில் திடீர் திருப்பம், துஷ்யந்த் சவுதலாவுடன் காங்., பேச்சுவார்த்தை
அரியானா, அக்டோபர்-24
அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை துஷயந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரியானாவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மூன்றாவது பெரிய கட்சியாக ஜனநாயக ஜனதா கட்சி உருவெடுக்கும் சூழல் உள்ளதால் துஷ்யந்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபந்திர ஹூடா, துஷ்யந்த் சவுதாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிதயதாகவும், இன்று மாலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பதவியை துஷ்யந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து துஷ்யந்த் சவுதலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸூடன் எந்த பேச்சுவாரத்தையும் இதுவரை நடைபெறவில்லை, தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார்.