4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார்..!!
பீகார் மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து 4வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பதவியேற்றார். பீகார் முதல்வராக 7வது முறையாகவும் தொடர்ந்து 4வது முறையாகவும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார். பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் நிதிஷ்குமாருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாட்னா, நவ-16

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. பீகாரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். இந்த நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பங்கேற்றார். பீகாரில் பாஜகவை விட மிக குறைவான இடங்களில்தான் ஜேடியூ வெற்றி பெற்றுள்ளது. பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றிருக்கிறது. இருப்பினும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி ஜேடியூவின் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக நேற்றைய கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் நேற்று ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார். ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து பாட்னாவில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாருக்கு, ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ் குமாருடன் பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். இதுதவிர 12 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
பீகார் முதல்மந்திரியாக நிதிஷ்குமார் தொடர்ந்து 4 முறையாகவும், மொத்தமாக 7-வது முறையாகவும் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.