மாநிலங்களை பிரிக்கலாம் : உயர் நீதிமன்றம்
சென்னை.அக்டோபர்.22
மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரை மத்திய அரசு 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி என்பவர் தாக்கல் செய்தார். மனுவில், ஜம்மு காஷ்மீரை போல் தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இன்றி பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது இல்லை என தெரிவித்தனர். காஷ்மீரை போல் தமிழகத்தையும் பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகம், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது, மேலும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரை பிரிப்பது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர்.