தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ-5

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கம். சிலர் அதிகாலையில் இருந்து இரவு வரை நாள் முழுக்க பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். சிலர் முன்தினம் முதல் இரவு முதல் கொண்டாடுவார்கள். இதற்கிடையே, பட்டாசு வெடிப்பதற்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த வருடமும் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் போல் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.