திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் மரணம்..!
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி, அக்-27

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையை அரங்கேற்றியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. முருகன் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன.
இதனிடையே, கொடூர நோயால் பாதிக்கப்பட்ட முருகன் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். திருச்சி நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 6 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழந்தார்.