தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்-18

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெறக்கூடும். இதன் காரணமாக அக்டோபர் 19 தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அக்டோபர் 20ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 21ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.