நியூசிலாந்து தேர்தலில் அபார வெற்றி.. 2வது முறையாக பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டெர்ன்..!!
நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி
48.9 சதவிகித வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாகப் பிரதமராகிறார்.
வெலிங்டன், அக்-17

நியூசிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி (இன்று) நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.
அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் ஆர்டெர்னின் ஜெசிந்தா நியூசிலாந்தில் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.