58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு.. உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
ஆஸ்லோ, அக்-9

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டோக்ஹோமிலிருந்து நோபல் பரிசை வென்றவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்தது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி பேருக்கு உணவு அளித்துள்ளது. பசியை போக்குதல் மற்றும் போரை தவிர்க்கும் நோக்கில் செயல்பட்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.