அதிமுகவை வழிநடத்த போகும் அந்த 11 பேர் யார்? யார்?..!
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்-7

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியது. செயற்குழு கூட்டத்திலும் இது எதிரொலித்தது. கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7ம் தேதி (இன்று) முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார்.
பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பா.மோகன் என மொத்தம் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 6 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.