சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்.31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது..!
மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபர் 31 -ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்-5

சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர்- லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
மேலும், கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ம் தேதி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்.31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனுமதி இல்லை எனவும் சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரீனா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.