அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர கட்சி தலைமை உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்கள் வரும் 6-ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அக்-2

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கிறது. அ.தி.மு.க.வில் இப்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. இந்த நிலையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும் 7-ம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் நிலையில், எம்எல்ஏக்களை அழைத்துள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.