ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது.. உச்ச நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது. ஆலை பாராமரிப்புக்கும் அனுமதி அளிக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, ஆகஸ்ட்-31

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு மீது, நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அதில், ஆலை மூடலுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் பராமரிப்பு பணிகளுக்காக இடைக்கால அனுமதி வழங்கிட வேண்டும்’ என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஆலைத்தரப்பு முன்வைத்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள்,“சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. ஆலையைப் பராமரிக்கவும் அனுமதி அளிக்க முடியாது” எனக் கூறியதுடன், ஆலைத்தரப்பின் மேல்முறையீட்டு மனுமீது பதிலளிக்க தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும், விரிவான விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.