உட்கட்சி தேர்தல் நடத்தாவிட்டால் காங்கிரஸ் கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சிதான்.. குலாம் நபி ஆசாத் பரபரப்பு..!!
காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித்தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்கட்சியாகவே நீடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-28

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-
தோ்தல் மூலம்தான் கட்சித் தலைமையைத் தோ்ந்தெடுக்க வேண்டும். அதாவது, அகில இந்திய தலைவா், மாவட்ட தலைவா்கள், மண்டல தலைவா்கள், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் தோ்தல் மூலமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைத்தான் கடிதத்தில் வலிறுத்தியுள்ளோம். உட்கட்சி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டால் 51% ஆதரவு கிடைக்க வேண்டும். முக்கிய பதவிகளுக்கு இரண்டு அல்லது 3 பேர் மட்டுமே போட்டியிடுவார்கள், 51% வாக்குகள் கிடைத்தால் அவர் வெற்றி பெற்றுவிடுவார். மற்றவர்களுக்கு 10 % அல்லது 15% வாக்குகள் கிடைக்கும். தலைவர் பதவிக்கு வெற்றி பெறும் நபருக்கு கட்சியில் 51% ஆதரவு உள்ளது என்பது தெளிவாகும். தற்போது நியமனம் செய்யப்படும் தலைவர்களுக்கு 1% கூட ஆதரவு இல்லை.காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தவர்கள் நாங்கள் எழுதிய கடிதத்தை வரவேற்பார்கள். மேலும், கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்கும்.
மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு நியமனம் செய்யப்படும் தலைவர்கள் ஒரு சதவீத தொண்டர்களின் ஆதரவை கூட பெறாதவர்கள்.அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி கட்சி தொண்டர்களின் 51% வாக்கு பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்தல் நடத்தி நியமிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் தலைவர்கள், கட்சிக்கு மட்டுமல்ல நாட்டிற்கே கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள்.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.