பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என தகவல்
டெல்லி, ஆகஸ்ட்-25

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் கூட கடந்த மே மாதம் 23-ம் தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு இருந்தது.
எனினும் இரு தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மழைக்கால கூட்ட தொடர் தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. பாராளுமன்ற அலுவல்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி இதற்கான பரிந்துரையை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 18 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும் என தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.