இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெல்லி, ஆகஸ்ட்-16

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (வயது 73). 40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ள சேத்தன், சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். முன்னாள் எம்.பி.யான இவர் உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் மந்திரியாகவும் இருந்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல உறுப்புகள் பாதிப்படைந்திருந்த அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 2-வது மந்திரி இவர் என்பது, குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.