டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.. மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாதம் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, ஆகஸ்ட்-11
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் காரே தெரிவித்துள்ளார். அதேவேளை, கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும், கல்லூரி வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.