கொரோனாவுக்கு சிறந்த தடுப்பூசி கைவசம் இருக்கு.. இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம், ஆகஸ்ட்-7

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் சந்தையில் இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்திற்குள் வெகுஜன தடுப்பூசிகள் தொடங்கும் என்று ரஷ்யா அறிவித்திருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாட்டில் ரஷ்யா விரைந்து செல்வதை எச்சரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ஐஐபிஆர்’ என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று சென்றார். அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை அவர் சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன. இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம்” என கூறி உள்ளார்.
இது தொடர்பாக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறும்போது, “ இஸ்ரேலில் ஐ.ஐ.பி.ஆர். உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் தொடங்கும்” என கூறியுள்ளார்.