ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோகித்..!
உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமை படுத்திக்கொண்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி 7 நாட்கள் தன்னை தனிமை படுத்தி கொண்டார்.
சென்னை, ஜூலை-29

தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நேரடி தொடர்பில் இருந்த உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 88 பேர் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பன்வாரிலால் புரோஹித் தன்னை 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்டுள்ளார் என ஆளுனர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.