ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பம்… சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு..!
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜெய்ப்பூர், ஜூலை-27

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆளுநர் சம்மதம் கொடுக்கவில்லை.
வரும் வெள்ளியன்று அவையை கூட்டி கொரோனா தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் ஆளுநருக்கு கோரிக்கைவிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்துவிட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, சட்டமன்ற விவகாரங்கள் துறை குழுவிடம் கூடுதல் விவரங்கள் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கு 3 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில், சட்டப்பேரவை கூட்டம் தனி மனித இடைவெளியை பின்பற்றி நடைபெற வேண்டும் எனவும், பேரவையை கூட்டுவதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு விதியாக ஒரே வேளை பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.